சிறியவனிலும் சிறியவன்
உலகத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் என்ற வித்தியாசங்கள்
இருக்கின்றன. அதேப்போல் பரலோக இராஜ்ஜியத்திலும்
சிறியவன் பெரியவன் என்று அளவீடும் உள்ளது.
இதைக் குறித்து மத்தேயு 5-ம் அதிகாரம் 19 ஆம் வசனத்தில் தேவனுடைய கட்டளைகள்
எல்லாவற்றிலும் சிறிதான ஒன்றையாகிலும் மீறி மனுஷருக்கு போதிப்பவன் சிறியவன் என்றும்,
எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு போதிப்பவன் பெரியவன் என்றும் கூறுகின்றது. அதேபோல்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் யோவான்ஸ்நானகனை குறித்து சொல்லும் போது, பரலோக இராஜ்ஜியத்தில்
சிறியவனாக இருக்கின்றவன் எவனோ, அவன் அங்கே அவனிலும் பெரியவனாக இருக்கின்றான் என்று சொல்கின்றார். இதை மத்தேயு 11-ம் அதிகாரம் 11-ம் வசனத்தில் வாசிக்கலாம். இரண்டு வசனங்களையும் ஆராய்ந்து பார்க்கும் போது
பரலோக இராஜ்யத்தில் பெரியவன் மற்றும் சிறியவன் என்ற அளவீடு உள்ளது என்பது நமக்கு புலப்படும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இந்த அளவீட்டின்படியேதான் யோவான் ஸ்நானகனைக் குறித்து பரலோக இராஜ்யத்தில் சிறியவனாக இருக்கின்றவன் அவனிலும் பெரியவனாக இருக்கின்றான் என்றும் கூறினார். ஏன் அவ்வாறு கூறினார்? யோவான் ஸ்நானகன் பரலோக இராஜ்யத்தில் சிறியவனிலும் சிறியவனாக இருக்க காரணம் என்ன? ஏன் அவனுடைய தலை சிரைச்சேதம் பண்ணப்பட்டது என்பதனைக் குறித்து இந்த செய்தியில் தியானிக்கலாம்.
யோவான் ஸ்நானகனை ஏரோது சிறைச்சாலையில் அடைத்திருந்தான். சிறைக்காவலில்
இருக்கும்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து காப்பாற்ற வருவார் என்று எதிர்பார்ப்புடன்
இருந்தான். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
அவனை விடுதலை செய்ய வரவில்லை. எனவே, அவனுக்குள் சந்தேகம் வந்துவிட்டது. வருகின்றவராகிய
மேசியா இவரா? இல்லை வேறு யாரும் வருவார்களா? இவர்தான் மேசியா என்றால் சிறைச்சாலையில்
இருக்கின்ற என்னை விடுதலை செய்ய வந்திருப்பாரே. ஆனால், இவர் வரவில்லை. ஒருவேளை இவர்
மேசியாவாக இருக்க மாட்டாரோ என்று நினைத்து, தன்னுடைய இரண்டு சீஷர்களை அழைத்து, வருகின்றவர் நீர்தானோ? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்க
வேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். (மத்தேயு 11: 2,3 )
இந்த இரண்டு சீஷர்களும் ஆண்டராகிய இயேசு கிறிஸ்துவிடம்
வந்து யோவான் ஸ்நானகன் கேட்கச் சொன்னதைக் அப்படியே
கேட்டார்கள். அதற்கு அவர் குருடர்கள் பார்வையடைகின்றார்கள்,
சப்பானிகள் நடக்கின்றார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகின்றார்கள், செவிடர்கள் கேட்கின்றார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கின்றார்கள், தரித்திரருக்கு
சுவிசேஷம் பிரசிங்கிக்கப்படுகிறது என்ற அடையாளங்களை காண்பித்து, என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்
என்றும் சொல்லி அவர்களை அனுப்பினார். (மத்தேயு
11: 4,5,6 )
இதை கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மேசியாவா இல்லையா என்ற
சந்தேகம் அவனுக்குள் வந்துவிட்டது என்பதையும், அந்த சந்தேகம் அதிகமாகும்போது இடறலடைந்துவிட்டான் என்பதனையும் அறிய முடியும்.
ஆம்.. உண்மையாகவே அவன் இடறலடைந்துவிட்டான்.
அதனால்தான் தொடர்ச்சியாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறும் போது பரலோக இராஜ்யத்தில்
சிறியவனிலும் சிறியவனாக இருக்கின்றவன் என்று கூறினார்.
எந்த ஒரு விசுவாசியும், ஊழியக்காரனும், பூமியில்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நன்கு அறிந்திருந்தும், இரட்சிக்கப்பட்டும், பரிசுத்த
ஆவியானவர் கொடுக்கும் அபிஷேகத்தினை பெற்றும், விசுவாசத்தில் இடறலடைவான் என்றால், அவன்
பரலோக இராஜ்ஜியத்தில் சிறியவனிலும் சிறியவனாக இருப்பான். அதாவது அவனுடைய Rank குறைந்து விடும். ஆதலால், இதை
வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகள் விசுவாசத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள
விசுவாசத்தில் எக்காரணம் கொண்டும் இடறலடையாமல் இருக்க வேண்டும்.
சரி… யோவான் ஸ்நானகன் இடறலடைய காரணம் என்ன?
அவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள
விசுவாசத்தை விட்டு இடறலடைய நிறையக் காரணங்கள் அவனிடத்தில் காணப்பட்டன. அதில் குறிப்பிட்ட
சில காரணங்களை மட்டும் தொடர்ச்சியாக தியானிக்கலாம்.
1.தன்
மேல் இருந்த அழைப்பினை முற்றிலும் அறியாமல் இருந்தான் :
எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியர்களையும்,
லேவியரையும் அனுப்பி ’நீ யார் என்றும், வருகின்றவராகிய
மேசியாவா’ என்றும் கேட்டார்கள். அவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மறுதலியாமல் நான் கிறிஸ்து அல்ல என்று அறிக்கை விட்டான். இது அவனுடைய உண்மையின் வெளிப்பாடு ஆகும். பின்பு நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கும்
இல்லை என்று சொன்னான். பின்பு தீர்க்கதரிசியானவரா
என்று கேட்டார்கள். அதற்கும் இல்லை என்பதனை பதிலாக சொன்னான். (யோவான் 1:19-25)
நீர் கிறிஸ்துவும் அல்ல, எலியாவும் இல்லை, தீர்க்கதரிசியும் இல்லை என்றால் வேறு யார் என்பதற்கு அவன் ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடி வனாந்தரத்தில்
கூப்பிடுகிறவனுடைய சத்தமாய் இருக்கிறேன் என்று சொன்னான். இது உண்மைதான். அவனுடைய அழைப்பும்
அதுதான். ஆனால், இது மட்டும் அவனுடைய அழைப்பு இல்லை. தீர்க்கதரிசியாகவும், எலியாவாகவும் அழைக்கப்பட்டிருந்தான்.
ஆனால், அது அவனுக்கு தெரியவில்லை. அவன் பிறக்கும்போதே உன்னதமானவரின் தீர்க்கதரிசி என்று
ஒரு அழைப்பு இருந்தது. (லூக்கா 1:76) அதேபோல் ஆண்டராகிய இயேசு கிறிஸ்துவும் கூட வருகின்றவனாகிய
எலியா என்று அவனைக் குறித்து சாட்சி கொடுத்திருந்தார்.(மத்தேயு 11:14) இதைக் குறித்து
தெளிவில்லாமல் இருந்தான். தான் யார் என்றும், தன் மேல் உள்ள அழைப்பு என்ன என்றும்,
தான் எப்படி ஊழியம் செய்ய வேண்டும் என்றும் தெளிவு இல்லாமல் இருந்தான். அதுவே அவன் இடறி செல்வதற்கு காரணமாகிவிட்டது.
ஒரு மனிதன் தன்னை முற்றிலுமாக ஊழியத்திற்கு அர்ப்பணித்து,
ஊழியம் செய்ய ஒப்புக்கொடுக்கும் போது, அந்த
மனிதன் மேல் பரலோகம் வைத்திருக்கும் திட்டத்தினை பொறுத்து, பலவிதமான அழைப்புகளை பரலோக தேவன் வைத்திருப்பார். அதேபோல் பலவிதமான தாலந்துக்களையும் கொடுத்திருப்பார்.
அதைக் குறித்து முழுமையாக அறிந்திருப்பது அவசியமான ஒன்றாகும். அதேபோல் அந்த அழைப்புகளில்
பிரதானமானது எது என்பதனையும், முன்னுரிமை கொடுக்க வேண்டியது எது என்பதனையும் மிகவும்
நன்றாக அறிந்திருக்க வேண்டும்.
அப்படி அழைப்பினைக் குறித்த முழு விவரங்கள்
தெரியாமல் இருக்கும் போது, சில நேரங்களில் பிரச்சனைகளையும், ஆவிக்குரிய குருட்டாட்டத்தையும்
கொண்டு வந்துவிடும். அதுவே, இடறலடைவதற்கு காரணமாகிவிடும். எனவே, தேவனுடைய ஊழியக்காரர்கள்
தன் மேல் உள்ள அழைப்பினை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். யோவான் ஸ்நானகன்
தன் மீது உள்ள அழைப்பினைக்குறித்து தெளிவில்லாமல் இருந்தான். அதனால் இடறிவிழுந்தான்.
2.தீர்க்கதரிசனத்தை
தவறாக புரிந்து கொண்டான்:
பிதாவாகிய தேவன் கொடுத்த அடையாளங்கள் மூலமாக இவர் தான் மேசியா என்று அறிந்து இஸ்ரேல் மக்களுக்கு காண்பித்துக் கொடுத்தவன் யோவான் ஸ்நானகன். (யோவான் 1:33) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து எனக்கு பின் வருகின்றவரோ என்னிலும் வல்லவராய் இருக்கின்றார். அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல, இவர் பரிசுத்த ஆவினாலும் அக்கினாலும் உங்களுக்கு ஞானஸ்தானம் கொடுப்பார், தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையே களஞ்சியத்தில் சேர்ப்பார் பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்று தீர்க்கதரிசனமாக உரைத்தான்.(மத்தேயு 3:11,12)
இதில் பாதி முதலாம் வருகையை பற்றிய தீர்க்கதரிசனமாகும். மீதி பாதி இரண்டாம் வருகையை பற்றிய தீர்க்கதரிசனமாகும்.
உதாரணமாக முதலாம் வருகையில் அவர் சாந்த குணமுள்ளவராக, அமைதியானவராக வந்தார். இரண்டாம் வருகையில் தான் இராஜாதி இராஜாவாக பதறை
அவியாத அக்கினியில் சுட்டெரிப்பவராக வருவார். இந்த கால வித்தியாசத்தை அறிந்துக்கொள்ளாமல் தீர்க்கதரிசனத்தை தவறாக புரிந்து கொண்டான். தாம்
உரைத்த தீர்க்கதரிசனத்தை தவறாக புரிந்துக்கொண்டான். இதனால்தான் சிறைச்சாலையில் இருக்கும்
போது ஆண்டராகிய இயேசு கிறிஸ்து இராஜாதி இராஜாவாக வந்து காப்பாற்றுவார் என்று நினைத்திருந்தான். அவரோ வரவில்லை. உடனே வருகின்றவர் இவரா அல்லது வேரோருவர் வருவாரா
என்று குழப்பத்திற்கு இடம் கொடுத்து, இடறலடைந்து விட்டான். தீர்க்கதரிசனத்தை தவறாக
புரிந்து கொண்டது அவன் இடறலடைவதற்கு காரணமாகிவிட்டது.
இந்நாட்களிலும் அநேகர் தீர்க்கதரிசனத்தை
தவறாக புரிந்து கொண்டு இடறலடைவதை பார்க்கலாம்.
தனக்காக அல்லது தன்னுடைய குடும்பத்திற்காக தேவ மனிதர்கள் மூலமாக கர்த்தருடைய
வார்த்தை தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டிருக்கும். பிசாசின் வார்த்தை அல்ல கர்த்தருடைய
வார்த்தைதான். இது பத்து வருடங்கள் கழித்து
நடப்பது தேவதிட்டமாக இருக்கும். ஆனால், அதை அறிந்துக்கொள்ளாமல் உடனே நடக்க வேண்டும்
என்று எதிர்பார்ப்பார்கள். அப்படி நடக்காது. உடனே சோர்ந்துபோய், விசுவாசத்தை மறுதலித்து,
பின்வாங்கி சென்றுவிடுவார்கள்.
ஆதலால், தேவனுடைய பிள்ளைகள் ஊழியக்காரர்கள்
இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனக்காகவும் தன் குடும்பத்திற்காக உரைக்கப்பட்ட
தீர்க்கதரிசனம் எக்காலத்துக்குரியது என்றும்,
எப்பொழுது அது நடக்கும் என்றும் அறிந்திருக்க
வேண்டும். தீர்க்கதரிசனத்தையும் அது நிறைவேறுங்காலத்தையும் அறிந்துக்கொள்ளுவது மிகவும்
நல்லது.
3.யாருக்கு
ஊழியம் செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருந்தான்:
ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம்
யோவானை பிடித்து கட்டி காவலில் வைத்திருந்தான். ஏன்? எதற்கு? எப்படி? என்று தியானித்தால்,
ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்பிவின் மனைவி ஏரோதியாளை தனக்கு மனைவியாக எடுத்துக் கொண்டான். இதைக் கண்ட யோவான் நீர் அவளை வைத்துக் கொள்வது நியாயமல்ல என்று தீர்க்கதரிசனமாக
அவனுக்கு சொல்லி இருந்தான். இதனால் தான் ஏரோது அவனை பிடித்து கட்டி காவலில் வைத்திருந்தான்.
ஏரோது என்பவன் யார்? தேவனைப் பற்றி அறியாதவன். அவனுக்கு பாவத்தை குறித்தும் பரிசுத்தத்தை குறித்தும்
வித்தியாசம் தெரியாது. பாவத்தினை துணிகரமாக செய்கின்றவன். அவனிடத்தில் பாவத்தை குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தால்
எளிதில் புரிந்துக் கொள்ள மாட்டான். தன்னையும் ஏரோதியாளை பிரிக்க நினைக்கின்றவன் என்று
நினைத்து, கொலை செய்ய ஆவலாக இருந்தான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்துவதுதான் அவனுடைய பிரதானமான
ஊழியம் ஆகும். ஆனால், அவன் அதை பிரதானமாக செய்யாமல், அந்தப்புரத்தை எட்டி
பார்த்து, ஏரோதுக்கு தீர்க்கதரிசனம் உரைத்துவிட்டான். அவனுடைய பாவத்தை குறித்து கண்டித்து பேசினான். இது
அவனுக்கு தேவையில்லாத பிரச்சினைகளை கொண்டு வந்தது. பெரும் மனஅழுத்தங்களை கொடுத்து சிறைச்சாலைக்கு
கொண்டு சென்று விட்டது. இதனால் விடுதலையோடு
அவனால் ஊழியம் செய்ய முடியவில்லை.
ஒருவேளை இரட்சிப்புக்கு பாத்திரமான அல்லது
சர்வவல்ல தேவனை அறிந்த தேவனுடைய பிள்ளைகளுக்கு
தீர்க்கதரிசனம் உரைத்திருந்தால் அவர்கள் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டிருப்பார்கள். கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாய் இருந்திருப்பார்கள். ஆனால், பாவிக்கு தீர்க்கதரிசனம் உரைத்ததன் மூலம்
பாடுகள்தான் வந்தது.
இதனால்தான் கத்தராகிய இயேசு கிறிஸ்து கூட பரிசுத்தமானதை நாய்களுக்கும் கொடாதேயுங்கள் என்றும், முத்துக்களை
பன்றிகள் முன் போடாதேயுங்கள் என்றும் கூறினார். மீறி போட்டால் தங்கள் கால்களினால் அவைகளை
மிதித்து திரும்பிக் கொண்டு பீறிப்போடும்.(மத்தேயு 7:6)
எனவே,
தேவனுடைய பிள்ளைகள் மற்றும் வரம் பெற்ற
தேவனுடைய ஊழியக்காரர்கள் பரிசுத்தமானதை
யாருக்கு கொடுக்கின்றோம் என்பதனையும் முத்துக்களை யார் முன் போடுகின்றோம் என்பதனையும்
குறித்து மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தகுதியில்லாதவர்களுக்கு கொடுத்துவிடக்க்கூடாது.
4.எதிர்பார்ப்பு
நிறைவேற முழுமையாக காத்திருக்கவில்லை:
சகல ஜனங்களும் அறிய மேகங்கள் நடுவில் உலகத்தை
ஆளும் இராஜாவாக இரண்டாம் வருகையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வருவார். ஆனால், முதல் வருகையில் சாந்த குணமுள்ளவராக ஆவிக்குரிய
இராஜவாக இந்த உலகத்திற்கு வந்தார். எனவே, அவருடைய
கிரியைகள் வெளியரங்கமாக இல்லாமல் ஆவியில்தான்
இருக்கும்.
சிறைச்சாலையில் இருந்த யோவான் ஸ்நானகன் தன்னை
விடுவிக்க இயேசு கிறிஸ்து வருவார் என்று எதிர்பார்ப்புடன் இருந்தான். பட்டயத்தோடும், கேடகங்களோடும் குதிரையில் வந்து
யுத்தம் செய்து விடுவிப்பார் என்று நினைத்திருந்தான். ஆனால், அவர் அப்படி வெளியரங்கமாக வரவில்லை. ஆவியில் கிரிகளை நடப்பித்தார்.
ஏரோது மற்றும் ஏரோதியாளின் தகாத உறவுக்கு
விரோதமாக பேசியதினிமித்தம், அவனைப் பிடித்து, கொலை செய்ய ஏரோது மனதாய் இருந்தான். இந்த மனநிலையை
மத்தேயு 14 ஆம் அதிகாரம் 5 ஆம் வசனத்தில் பார்க்கலாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
வந்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் சிறைச்சாலையில் காத்திருந்த யோவானை, உயிரோடு காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, ஏரோதின் மனநிலையில் ஒரு மாற்றத்தை கொடுத்தார். இது ஆவியில் நடக்கின்ற கிரியையாகும். இதனால் அவனுடைய மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.
இதன் தொடர்சியாக மாற்கு 6-ம் அதிகாரம் 20-ம் வசனத்தில் யோவான் நீதியும் பரிசுத்தமுள்ளவன் என்று அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அனேகக் காரியங்களை செய்து, விருப்பத்தோடு அவன் சொல்லி கேட்டு வந்தான். என்று வேதம் கூறுகின்றது. இந்த வசனத்தை நன்றாக கவனித்து வாசியுங்கள். அவனை பாதுகாத்து என்ற ஒரு வாக்கியம் உள்ளது. அதாவது கொலை செய்ய மனதாய் இருந்தவன் மனதில் ஒரு மாற்றத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கொடுத்துவிட்டார். இந்த மாற்றம் வந்த போது அவன் யோவான் ஸ்நானகனை பாதுகாக்கின்றவனாக மாறிவிட்டான்.
ஆவியில் நடந்த இந்த மாற்றம் மாம்சத்தில் முழுமையாக
நிறைவேறும் வரைக்கும் யோவான் ஸ்நானகன் பொறுமையோடு
காத்திருக்க வேண்டும். ஆனால், அவன் அப்படி
முழுமையாக காத்திருக்கவில்லை. கொஞ்ச நாள் பொறுமையோடு
காத்திருந்தான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
வரத்தாமதமான போது, அவர் ஆவியில் செய்துகொண்டிருக்கின்ற கிரியைகளை அறியாமல், வருகின்றவர்
இவர்தானோ இல்ல வேறு ஒருவர் வரக் காத்திருக்க வேண்டுமா? என்று சொல்லி தன்னுடைய விசுவாசத்தை
இழந்து போனான். எவ்வளவோ பரலோக தேவன் அவனுக்கு ஆவியில் கிரியைகளை நடப்பித்தார். ஆனால், எப்பொழுது விசுவாசத்தை இழந்து போனானோ அதன்
பின்பு பாதுகாக்க முடியவில்லை. சிரைச்சேதம் பண்ணப்பட்டான். ஆம் தீர்க்கதரிசியின் தலை
துண்டிக்கப்பட்டது.
இதை வாசித்துக் கொண்டிருக்கிற தேவனுடைய பிள்ளைகளே! தேவனுடைய ஆசீர்வாதத்திற்காகவும், அற்புதத்திற்காகவும்,
இயற்கைக்கு மேற்பட்ட கிரியைகளுக்காகவும் நீங்கள் விசுவாசத்தோடு காத்திருக்கலாம். அது
முழுமையாக நிறைவேறும் வரைக்கும் கடைசி வரை காத்திருங்கள். தாமதமாகுது என்று சொல்லி
சோர்ந்து போகாதீர்கள். தேவன் தாமே பெரியக்
காரியங்களை செய்வாராக.
தன் மேல் இருந்த பரலோக அழைப்பினைக் முழுமையாக
அறியாமல் இருந்ததும், தீர்க்கதரிசனத்தை தவறாக புரிந்துகொண்டதும், யாருக்கு ஊழியம் செய்ய
வேண்டும் எப்படி ஊழியம் செய்ய வேண்டும் என்ற விபரங்கள் தெரியாமல் இருந்ததும், எதிர்பார்ப்பு
நிறைவேற முழுமையாக காத்திருக்காமல் இருந்ததும் யோவான் ஸ்நானகன் இடறி போவதற்கு காரணமாகிவிட்டது.
எனவே தேவனுடைய பிள்ளைகள் எச்சரிக்கையாக இருங்கள்.
இதுவரை வெளிவந்த தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க CLICK HERE
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இந்தச் தீர்க்கதரிசன செய்தியும் ஆலோசனையும் உங்களுக்கு பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். மேலும் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். இந்த ஊழியத்தினைப்பற்றி அறிந்துக்கொள்ளவும், ஜெபத்தேவைகள் மற்றும் ஜெப ஆலோசனைகளுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். CLICK HERE
Comments
Post a Comment