மெகா வேதாகமம் எழுதும் தேர்வு-2023



கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…    

   தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்… கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள்  சார்பாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, 2019-ம் வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும்  மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. வீட்டிலிருந்தபடியே கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியைப் பார்த்து (பரிசுத்த வேதாகமத்தை), சொந்தக்கையால் எழுதி கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  அப்படி அனுப்பியவர்களின் நோட்டுகளை சரிபார்த்து, எந்த பிழையுமின்றி நன்றாக எழுதியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன.

  அதன்படி கடந்த 2023-ம் வருடமும் இந்த மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வேதப்பகுதி கொடுக்கப்படுவது வழக்கம்.  2023 –ம் வருடத்தில் பழைய ஏற்பாட்டில் உள்ள முதல் ஐந்து புத்தகங்களை வீட்டிலிருந்தபடியே பார்த்து எழுதவேண்டும் என்றும், விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய ஒரு நபருக்கு ஒரு சவரன் தங்கம் பம்பர் பரிசாக வழங்கப்படும் என்றும், அதேபோல் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு, முழுமையாக அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்பு பரிசாக 3000 ரூபாயும், கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு எந்த மாவட்டத்திலிருந்து (District) அதிகமானோர் முழுமையாக (Complete) எழுதி அனுப்புகின்றார்களோ அந்த மாவட்டத்தில் இருந்து அனுப்பியவர்களுக்கு மாத்திரமே ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்றும் 2023- ம் ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

   சுமார் பதினொன்றாயிரத்திற்கு (11,000) மேற்பட்டோர் பதிவு செய்து இந்த தேர்வில் கலந்துக் கொண்டு உற்சாகமாக எழுதினார்கள். கடைசி நாள் 2023 ம் ஆண்டு டிசம்பர் 15 ம் தேதி ஆகும். (15-12-2023) ஆனால், 2023 ம் வருடம் டிசம்பர் மாதத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை,  வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் அநேகரால் சரியான நேரத்திற்குள் அனுப்பமுடியவில்லை. எனவே, 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி கடைசி தேதியான 31-12-2023 - க்குள் எழுதிய நோட்டை 18 பேர் நேரிலும், 36 பேர் போஸ்ட் மூலமாகவும், 223 பேர் கொரியர் மூலமாகவும், மொத்தம் 277 பேர் அனுப்பியிருந்தார்கள். இதில் 247 பேர் தமிழிலும், 30 பேர் ஆங்கிலத்திலும் எழுதியிருந்தார்கள்.

   வந்து சேர்ந்த நோட்டுகள் அனைத்தையும் ஆட்களை நியமனம் செய்து, கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்குட்பட்டு எல்லாம் சரியாக எழுதியிருக்கின்றார்களா? என்று இரண்டு சுற்றுக்களாக சரிபார்க்கப்பட்டு, இந்த இரண்டு சுற்றிலும் வெற்றிப் பெற்றவர்கள் பம்பர் பரிசுக்கு தகுதியுள்ளவர்கள் ஆவார்கள் என்றும், ஒருவேளை இதில் அதிகமானோர் இருப்பின் சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபருக்கு ஒரு சவரன் தங்கம் பம்பர் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    முதல் சுற்றில் அனைவரின் நோட்டுகளும்  நன்றாக சரிப்பார்க்கப்பட்டது. அதில்  19 பேர் வெற்றிப்பெற்று இரண்டாம் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முதல்சுற்றில் வெற்றிப்பெற்ற 19 பேரின் நோட்டுகளும் இரண்டாம் சுற்றில் மிக ஆழமாக சரிபார்க்கப்பட்டது. அதில் அதே 19 பேர் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இறுதி சுற்றில் ஒன்றுக்கும் அதிகமானோர் இருப்பதினால் ஒரு நபருக்கு மாத்திரமே பம்பர் பரிசாக ஒரு சவரன் தங்கம் வழங்கப்பட வேண்டும். ஆதலால், ஒரு நபரை சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.

    அதன்படி 09-08-2024 அன்று மாலை 7 மணி அளவில் பம்பர் பரி்சாக ஒரு சவரன் தங்கத்தை பெறுபவர் யார் என்பதை கண்டறிய    சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படும் இறுதி சுற்றுக்கான கூட்டம் ஆயத்தப்படுத்தப்பட்டது. இக்கூட்டத்தில்  ஆலங்குளம் பகுதியை மையமாக வைத்து நண்பர்கள் தரிசன ஜெபக்குழு என்ற ஊழியத்தை செய்து வரும் சகோதரர் S.பொன்ராஜ் அவர்கள் முன்னிலையில் 19 பேரின் பெயர்களும் எழுதிய சீட்டுப் போடப்பட்டது. நன்றாக ஊக்கமாக ஜெபித்து,  தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த Mrs. Nina Shiny. (Reg.No : Qz7597 RvD No. : RvD266) என்ற சகோதரியை  தேர்ந்தெடுத்தார்கள்.

    மேலும், கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு, முழுமையாக அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்பு பரிசாக 3000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து பேர் இரண்டு முறை எழுதி அனுப்பியிருந்தார்கள். அதிகமானோர் இருப்பதினால் சீட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில்  கோயம்புத்தூர்  மாவட்டத்தினை சேர்ந்த Ms. S.Angel Packiam  (Qz2647) அவர்கள் தேர்தெடுக்கப்பட்டார்கள். இரண்டு முறை அனுப்பிய அவர்களுடைய நோட் எண்  D169, D170 ஆகும்.

      அதேபோல் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு எந்த மாவட்டத்திலிருந்து (District) அதிகமானோர் முழுமையாக (Complete) எழுதி அனுப்புகின்றார்களோ அந்த மாவட்டத்தில் இருந்து அனுப்பியவர்களுக்கு மாத்திரமே ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 44 பேரும், சென்னையிலிருந்து 39 பேரும், தூத்துக்குடியிலிருந்து 30 பேரும் இதர மாவட்டங்களிருந்து இதற்கு குறைவாகவே அனுப்பியிருந்தார்கள். ஆதலால்,  திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து அனுப்பியவர்கள் அதிகமாக இருப்பதனால் அவர்கள் அனைவரும்   ஆறுதல் பரிசினை பெற தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.

    பரிசினைப் பெற தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று அவர்களின் வீடுகளில் வைத்து ஜெபித்து பரிசினை வழங்கி வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் சொல்லுவது வழக்கம். கடந்தாண்டுகளிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது. அதன்படி  2023 ம் வருடம் நடத்தப்பட்ட தேர்வில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று பரிசு வழங்கப்பட்டது. முதலில் 14-09-2023 அன்று பம்பர் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த சகோதரி Mrs. Nina Shiny. (Reg.No : Qz7597 RvD No.: RvD266)  அவர்களின் வீட்டிற்கு சென்று, குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் பம்பர் பரிசாக ஒரு சவரன் தங்கமும், சான்றிதழும், வாழ்த்துக்களும், ஆசீர்வாதமும் ஜெபத்துடன் வழங்கப்பட்டது. இதை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியத்தினை செய்து வரும் சகோதர் T. வினோத் சாமுவேல் அவர்கள் வழங்கினார்கள். அக்குடும்பத்தினர் கிறிஸ்துவுக்குள் மகிழ்ச்சியுடன் பரிசினைப் பெற்றுக்கொண்டு சாட்சியையும் பதிவு செய்து தந்தார்கள்.



    அதிகம் எழுதும் குடும்ப உறுப்பினர்களுக்கான சிறப்பு பரிசினைப் பெறும் சகோதரி Ms. S.Angel Packiam  (Qz2647) அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் என்பதினால் நேரில் சென்று அவர்களுக்கு பரிசுத் தொகையையும், சான்றிதழையும் வழங்க முடியவில்லை. ஆதலால் Google Pay  மூலமாக பரிசுத் தொகை  வழங்கப்பட்டது.  கொரியர் மூலமாக சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களும் இந்த பரிசினை பெற்றுக்கொண்டு சாட்சியினை பதிவு செய்து அனுப்பி வைத்தார்கள்.

 இந்த தேர்வினை வெற்றிகரமாக நடத்தி முடிக்க கிருபை பாராட்டின பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு மகிமையும், கனமும், கீர்த்தியும், புகழ்ச்சியும் உண்டாகட்டும். ஆமென். இந்த தேர்வுக்காக பதிவு செய்து கலந்துக்கொண்டு, கர்த்தருடைய பரிசுத்த வார்த்தையை தன்னுடைய சொந்தக்கரங்களால் எழுதி தியானிக்க அர்ப்பணித்த உங்கள் அனைவரையும் பரலோக தேவன் தாமே உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார். (ஏசாயா 54:17) என்ற வாக்குத்தத்தத்தின் படி ஆசீர்வதிப்பாராக.

   மெகா வேதாகமம் எழுதும் தேர்வு 2023 - க்கான வெற்றி பெற்ற நபரை தேர்ந்தெடுப்பதில் முன்னிலை வகித்து,  சீட்டு போட்டு குலுக்கல் முறையில்  ஒரு நபரை தேர்ந்தெடுத்த சகோதரர் S.பொன்ராஜ் அவர்களுக்கும்,  வேதாகமம் எழுதும் தேர்வு-2023 ஐ பரலோகத் திட்டத்தின்படி நடத்தி முடிப்பதற்காக ஜெபித்து, கொடுத்து, உழைத்து பிரயாசப்பட்ட அனைவருக்கும்  தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். பரிசுகளைப் பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்.

 



 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..